பிரதமர் மகாதீர் மொஹம்மத் தலைமையிலான ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாக உள்ளது. இந்நிலையில் பிரதமர் பொறுப்பை அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒரு பிரிவினர் வலியுறுத்தும் நிலையில், ஆளுங்கூட்டணியின் உறுப்புக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தின் முடிவில், பிரதமர் மகாதீர் எப்போது அன்வாரிடம் அரசு அதிகாரத்தைப் ஒப்படைப்பார் என்பதற்கான காலம் வரையறுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒருவேளை மலேசியாவில் ஏபெக் (APEC) மாநாடு நவம்பரில் நடந்து முடிந்த பிறகுதான் மகாதீர் பதவி விலகுவார் எனில், அதுவரை அன்வார் இப்ராகிம் துணைப் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் சிலர் வலியுறுத்தினர்.
ஆனால் இவை இரண்டுமே நடக்கவில்லை. மாறாக, பிரதமர் பதவியில் இருந்து எப்போது விலகுவது, எத்தகைய சூழ்நிலையில் விலகுவது என்பது குறித்து மகாதீரே முடிவெடுப்பார் என கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதே வேளையில் பிரதமர் மகாதீர் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெறுவதை தாம் விரும்பவில்லை என அன்வார் இப்ராகிம் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மகாதீர் பதவி விலகும் வரை தாம் பொறுமை காக்கப் போவதாகவும், அதிகாரத்தை ஒப்படைப்பது தொடர்பில் தமக்கும் பிரதமருக்கும் யாரும் நெருக்கடி அளிக்கக் கூடாது என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.